search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை குறைவு"

    • பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
    • ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

    சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

    இந்நிலையில் இன்று ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது,

    விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் அடுத்த வாரம் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    • தக்காளி பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு குறைந்த அளவு லாபம் கூட கிடைப்பதில்லை.
    • ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, இடையகோட்டை, மூலச்சத்திரம், வடகாடு, கேதையெறும்பு, பால்கடை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் அதிகளவு தக்காளி பயிரிடப்பட்டது. தக்காளி தற்போது அதிகளவு விலைச்சல் அடைந்துள்ளது.

    விளைச்சல் அடைந்த தக்காளியை தரம் பிரித்து தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் காமராஜர் மற்றும் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கனி மார்க்கெட்டிக்கு கொண்டு வந்து விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள்.

    இங்கிருந்து மதுரை, நெல்லை, உடுமலைப்பேட்டை பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியிலேயே காய்கறி மார்க்கெட்டுகள் அமைந்துள்ளதால் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது.

    தினசரி 4 ஆயிரம் டன் வரத்து உள்ளது. 2 மார்க்கெட்டுக்கும் தலா 2 ஆயிரம் டன் தக்காளிகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து அதிகரித்ததால் ரூ.350க்கு விற்கப்பட்ட 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80முதல் ரூ.100 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே தக்காளி பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு குறைந்த அளவு லாபம் கூட கிடைப்பதில்லை.

    பறிப்பு கூலி மற்றும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் சரக்கு வேன் வாடகை கட்டணத்திற்கு கூட கட்டுபடியாகாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். பல ஆண்டுகளாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தக்காளி சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.40க்கும், பல்லாரி ரூ.20க்கும் விற்கப்படுகிறது.

    • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
    • பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ130வரையிலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.85வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    தினசரி 70டன் வரை விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்து போனதால் அதன் விலை அதிகரித்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை திடீரென 2 மடங்கு வரை உயர்ந்தது.

    இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வர தொடங்கி உள்ளன. இன்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

    இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    இதேபோல் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும், ஊட்டி கேரட் ரூ.20-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.

    • கடலூர் துறைமுகம் கடந்த பல நாட்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது
    • நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் பொதுமக்கள் விரத முறையை கடைப் பிடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கடைசி வார சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர். கடலூர் துறைமுகம் கடந்த பல நாட்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட் டது.இன்று அதிகாலை 3 மணி முதல் வியாபாரி களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    இதில் வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக்கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

    • வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும்.
    • அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது

    குண்டடம்

    குண்டடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை ஈரோடு, கோவை, திருப்பூர். பொள்ளாச்சி, கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

    இது குறித்து ஆடு வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-

    கடந்த மாதங்களில் விறுவிறுப்பாக ஆடுகள் கோழிகள் விற்பனையானது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர்.

    இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 6ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம 5 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் கோழி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 300 கிலோ முதல் ரூ.350 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் விலை கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
    • தருமபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.

    இதனால் தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ ரூ.130 முதல் ரூ.160 வரையும், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் தக்காளியின் வரத்து அதிகரிக்க உயர்ந்ததால் விலை படிப்படியாக குறைந்து கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பெல்ரம்பட்டி, கரகூர், திருமல்வாடி, உசிலம்பட்டி, 5-வது மைல், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், அதேபோல் ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் மேலும் தக்காளி விலை குறைந்து 15 கிலோ கூடை தக்காளி 400 ரூபாயும் , 28 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி 800 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    இன்று தருமபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வரத்து அதிகரித்து விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கினால் மேலும் விலை குறைய வாய்ப்பு ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
    • இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை
    • இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம், ராதாபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், சங்கரன்கோவில், கோவில்பட்டி, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலம் பகுதியில் இருந்து அரளிப்பூவும், தோவாளை, ராஜாவூர், மருங்கூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளிப்பூவும், சம்மங்கி, கோழி கொண்டை, அருகம்புல், தாமரை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. ஆடி மாதம் என்பதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது.

    பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு வருமாறு:-

    பிச்சிப்பூ ரூ.600, மல்லிகைப்பூ ரூ.400, சம்பங்கி ரூ.125, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டரோஸ் ரூ.110, மஞ்சள் கிராந்தி ரூ.60, சிவப்பு கிராந்தி ரூ.70 என அனைத்து பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வருகிற 19-ந்தேதி முதல் கேரளா முழுவதும் ஓணம் கொண்டாட இருப்பதால் பூக்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    • விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சின்ன வெங்கயம் அதிக அளவில் பயிரிட்டிருந்ததால், விரைவாக அவற்றை எடுத்து மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக சின்ன வெங்காயம் விலை ரூ.70 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். செங்கோட்டையை அடுத்த இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராம பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் செய்யவேண்டிய சின்ன வெங்காயம் சாகுபடியானது தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்துவிட்டது. அங்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள சுமார் 500 ஏக்கர் அளவிலான நிலங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். 2 மாத பயிரான சின்ன வெங்காயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

    விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு உழுவது, பயிரிடுவது, பூச்சிக்கு மருந்து அடித்தல், உரம் களையெடுத்தல், மழை பொய்த்தால் விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சல் உள்ளிட்ட வகையில் அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகிறது.

    அதற்கு தகுந்த மாதிரி அறுவடை தொடங்கிய காலத்தில் சென்ற மாதம் விலை ரூ.140 வரை விலை கிடைத்ததால் லாபகரமாக இருந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்த சின்ன வெங்காயம் ரூ.70-க்கும் விலை போகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். மழை காலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாணல் தட்டுகளை பறித்து வந்து விற்பனை செய்து வருவார்.
    • தற்போது 500 ரூபாய்க்கு குறைவாகவே விலை போகின்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதி பகுதியைச் சேர்ந்தவர் பூசாரி காளியப்பன் (வயது 52). கூலித் தொழிலாளியன இவர் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் முளைத்திருக்கும் நாணல் தட்டுகளை பறித்து வந்து விற்பனை செய்து வருவார்.

    இந்த நாணல் தட்டுகள் கட்டைப்பை தயாரிக்கவும், தக்காளி நாற்றுகள் சாயாமல் இருப்பதற்கும், வெற்றிலை கொடி தலைவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. 200 குச்சிகள் கொண்ட ஒரு கட்டின் விலை கடந்த சில வாரங்களுக்கு முன் 700 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

    தற்போது 500 ரூபாய்க்கு குறைவாகவே விலை போகின்றது.

    மேலும் இதுகுறித்து கூளித்தொழிலாளியான பூசாரி காளியப்பன் கூறுகையில்,

    நாணல் தட்டுகளை ஓடைகளில் பறிக்கும் ேபாது அந்த பகுதிகளில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகளவில் இருக்கும்.

    அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரிய கட்டுகளாக கட்டி தலையில் சுமந்தபடி அங்கிருந்து கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிடைக்கும் இந்த விலை உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை.

    மேலும் வாரத்தில் 3 அல்லது 4 நான்கு கட்டுகள் மட்டுமே விற்பதால் போதிய வருமானம் கிடைக்கவில்லை என வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

    • கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
    • தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.

    ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து போனதால் கடந்த மாத இறுதியில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.130ஐ கடந்து விற்கப்பட் டது. தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து விற்கப்படுகிறது.

    நேற்று 40 லாரிகளில் இருந்த தக்காளியின் வரத்து இன்று 35லாரிகளாக குறைந்து உள்ளது. இதனால் இன்று மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பச்சை காய்கறிகளான கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் சரிந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.20-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை அடுத்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை குறைந்து கிலோ ஒன்றுக்கு ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    மதுரை

    மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை மற்றும் கடுமை யான வெயில் காரண மாக தக்காளி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்ப ட்டது. இதனால் மார்க்கெட்டு களில் தக்காளியின் வரத்து கணிசமான அளவுக்கு குறைந்தது காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

    ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டிய நிலையில் மதுரையில் உழவர் சந்தைகளில் மட்டும் 85 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் தக்காளியின் வரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு ள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களில் தக்காளி யின் விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக தினமும் அதிக அளவில் தக்காளி பெட்டிகள் மதுரை மார்க்கெட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன. வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளியின் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. 

    5 நாட்களுக்கு முன்பு தக்காளி வெளி மார்க்கெட்டு களில் 110 ரூபாய்க்கும், உழவர் சந்தை களில் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவந்தன. ஆனால் இன்று தக்காளி கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து வெளி மார்க்கெட்டுகளில் தக்காளி 90 ரூபாய்க்கும் உழவர் சந்தைகளில் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

    பொதுமக்களும் மற்ற காய்கறி களான கத்தரி 32 ரூபாய்க்கும், உருளைக் கிழங்கு 42 ரூபாய், வெண்டைக்காய் 36 ரூபாய், புடலங்காய் 24 ரூபாய், 50 ரூபாய் மிளகாய் 16 ரூபாய், கேரட் 40 ரூபாய், 50 ரூபாய் இருபது ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் 28 ரூபாய் கொடுக்கப்பட்டது. மேலும் கேரட் 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. முருங்கைக்காய் கிலோ 50 ரூபாய்க்கும், அவரை 90 ரூபாய்க்கும், பட்டர்பீன்ஸ் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
    ×